முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு தண்டனையை உறுதி செய்த விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவதால், வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும். விழுப்புரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஸ்தாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி, ‘விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த 9ம் தேதி தாக்கல் செய்த மெமோவில், வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தோம். ஆனால் அதனை பரீசிலிக்காமல், நீதிபதி இன்று தீர்ப்பை பிறப்பித்துள்ளார்.

எனவே விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த இந்த தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் தீர்ப்பில் மனு தள்ளுபடி என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. விரிவான தீர்ப்பை அறிவிக்காததால் ஆவணங்களை வரவழைத்து சரிபார்க்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து விழுப்புரம் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால்தான் ஆவணங்களை பெற்று ஆய்வு செய்ய முடியும் எனக் கூறி, வழக்கு விசாரணையை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்.27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE