வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்குப் பின் மீட்பு @ இமாச்சல்

By செய்திப்பிரிவு

இமாச்சல்: இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்கள் தேடுதலுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45). இவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் கோபிநாத்துடன் சில நாட்களுக்கு முன்பு இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.5) சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி, சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், கார் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், காரில் பயணித்த வெற்றி துரைசாமி காணாமல் போனார். கடந்த 8 நாட்களாக அவரை தேடும் பணி நடந்து வந்தது. இமாச்சலப் பிரதேச போலீஸார், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஸ்கூபா டைவிங் வீரர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் பணியின்போது, பாறை இடுக்குகளில் சேகரிக்கப்பட்ட ரத்தக்கறை மற்றும் திசுக்களின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், 9 நாளாக வெற்றி துரைசாமியின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில், ஸ்கூபா டைவிங் வீரர்கள் அவரது உடலைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் உடற்கூராய்வுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியான நிலையில், வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி இமாச்சலப் பிரதேசம் செல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உடற்கூராய்வுக்குப் பின்னர், வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE