கோடை காலத்தில் ஆவின் பொருட்கள் விற்பனையை 20% வரை அதிகரிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: கோடை காலத்தில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆவின் ஐஸ் கிரீம், மோர் உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் மேலாண்மை இயக்குநர் வினீத் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பால் பொருட்கள் விற்பனை வாயிலாக மாதந்தோறும் ரூ.45 கோடி வரை ஆவினுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.

தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஆவின் பால் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத் கூறியதாவது: வரும் கோடைகாலத்தில் ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். கோடைகாலத்தில் ஆவின் ஐஸ் கிரீம்க்கு தேவை அதிக அளவில் இருக்கிறது.

இந்த தேவையைப் பூர்த்தி செய்ய திட்டமிட்டு உள்ளோம். தமிழகத்தில் சென்னை அம்பத்தூர், சேலம், மதுரையில் ஐஸ் கிரீம் தயாரிப்பு ஆலைகள்உள்ளன. இங்கு ஐஸ் கிரீம், குல்பி ஐஸ், மோர் உள்ளிட்ட பால் பொருட்களை அதிக அளவு தயாரிக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். ஐஸ் கிரீம் வைக்கும் குளிரூட்டும் சாதனங்களை தயார் செய்ய உள்ளோம்.

இதுதவிர, இந்த ஆண்டு கோடை காலத்தில் ஆவின் மோர் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE