‘திமுக ஆட்சி மிக மோசமானது’ - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா @ சென்னை

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மோசமானது” என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்தது. “நான் இங்கு வந்தபோது சந்தை மூடப்பட்டு உள்ளது. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு உள்ளன. அதிக அளவிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் எனக்கு எமர்ஜென்சி நாட்களை நினைவூட்டுகிறது.

ஆனால், நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் ஆட்சியில் இருந்து வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை. யாரையும் கடை திறக்கவோ, வெளியில் வரவோ போலீஸார் அனுமதிக்கவில்லை. இதுதான் ஜனநாயகமா?

தேசிய அளவில் தமிழகத்தில் பங்கு முக்கியமானது. பிரதமர் மோடிக்கு தமிழகம் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. உலகத்தில் எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுபவர் பிரதமர் மோடி. நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.

தமிழகம் மோசமான தலைமையால் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி மிக மோசமானது” என அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE