போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால் ஜிஎஸ்டி பதிவு முடக்கம்: கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல்தயாரித்து வணிகம் செய்வோரின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்பட்டு, வரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி எச்சரித்துள்ளார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறைஅமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் கடந்த ஜனவரி மாதத்துக்கான பணி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்மூர்த்தி பேசியதாவது:

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்களின் ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்ய வேண்டும்.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாக கோட்டங்களில் வரி வருவாயை அதிகரிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுத்து வரி வருவாயில் நிர்ணயித்த இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், துறையின் செயலர் பா.ஜோதி நிர்மலா சாமி, வணிகவரி ஆணையர் டி.ஜகந்நாதன், கூடுதல் ஆணையர் பி.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE