நில இழப்பீட்டுத் தொகை விவகாரம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விவரம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்குப் பின்னர், எந்தெந்த மாவட்ட ஆட்சியர்கள் தீர்ப்பை மீறி, 3 ஆண்டுகளுக்கு பின்னர் நில இழப்பீட்டு கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து, நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டனர் என்ற விவரங்களைத் தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும், விரிவாக்கப் பணிகளுக்காகவும் ஏராளமான தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலங்களுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து, நில உரிமையாளர்களுக்கு வழங்க சிறப்பு வட்டார வருவாய் அதிகாரிகளை நியமிக்கப்படுவர். இவர்கள் நிர்ணயம் செய்யும் தொகையைவிட, கூடுதல் இழப்பீட்டு கோருபவர்கள், நில உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அதாவது, சிறப்பு வட்டார வருவாய் அதிகாரி இழப்பீடு நிர்ணயித்த நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் இந்த மேல்முறையீட்டு மனுவை ஆட்சியரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நில ஆர்ஜிதச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, 3 ஆண்டுகளுக்கு பின்னரும் ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேல்முறையீடு செய்து, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெற்றது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியரிடம், 7 முதல் 9 ஆண்டுகள் வரை காலதாமதமாக நிலங்களுக்கு இழப்பீடு கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை பல்வேறு காலக்கட்டத்தில் முன்னாள் ஆட்சியர்கள் அமிர்தஜோதி, விஜயராணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, இதை விசாரிக்கக் கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், 3 ஆண்டுகளுக்கு பின்னரும் ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று குறிப்பிட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அதை புறம்தள்ளிவிட்டு, இழப்பீட்டு தொகையை சென்னை முன்னாள் ஆட்சியர்கள் அமிர்தஜோதி, விஜயராணி ஆகியோர் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ‘‘காலதாமதமாக மேல்முறையீடு செய்யலாம் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது. அதன்பின்னர். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, நிலத்துக்கு ஆட்சியர்கள் இழப்பீடு நிர்ணயம் செய்தது உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல்’’ எனக் கூறி முன்னாள் ஆட்சியர்கள் அமிர்தஜோதி, விஜயராணி ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

மேலும், இரு முன்னாள் ஆட்சியர்களும் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2 முன்னாள் ஆட்சியர்களும் தனி நீதிபதி முன்பு நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை கூறினார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, 2 ஆட்சியர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மார்ச் 11-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மார்ச் 3-வது வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மேலும், உச்ச நீதிமன்றம் 2018-ம் ஆண்டு தீர்ப்பு அளித்த பின்னர், எந்தெந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த தீர்ப்பை மீறி, 3 ஆண்டுகளுக்கு பின்னர் நில இழப்பீட்டு கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து, நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டனர் என்ற விவரத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE