மக்களவை தேர்தலில் தமிழகத்தில் இண்டியா கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும் என்று இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாகவும், 3-வது முறையாக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி பிரதமராவார் எனவும் பெரும்பாலானோர் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இந்நிலையில் இந்தியா டுடே குழுமம் சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை அனைத்து மக்களவை தொகுதிகளிலும் நடத்தியுள்ளது. இதில் பல்வேறு தரப்பட்ட 35 ஆயிரத்து 801 பேரிடம் கருத்துகளை கேட்டறிந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் வரும் மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களிலும் வெல்லும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இதர கூட்டணிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றும், இண்டியா கூட்டணி 47 சதவீத வாக்குகளையும், தேசிய ஜனநாயக கூட்டணி 15 சதவீத வாக்குகளையும், இதர கூட்டணிகள் 38 சதவீத வாக்குகளையும் பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.