மாவோயிஸ்ட்களுடன் தொடர்பா? - குறும்பட இயக்குநர் வீட்டில் என்ஐஏ சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முகில் சந்திரா (40). குறும்பட இயக்குநரான இவர், சென்னை கொரட்டூர் கெனால் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பல ஆண்டுகளாக வசிக்கிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தினரிடம், என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களுக்கும், முகில் சந்திராவும் சமூக ஊடகம் வாயிலாகவும், செல்போன் வாயிலாகவும் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் முகில் சந்திரா வீட்டில் சோதனை நடத்துவதற்கு ஹைதராபாத்தில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று வந்தனர்.

அவர்கள் முகில் சந்திரா வீட்டில் காலை 8மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். பல மணிநேரம் நடைபெற்ற இச் சோதனையில் அங்கிருந்துசெல்போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல தெலங்கானா மாநிலத்தில்மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE