உதகை விபத்து | கட்டிட உரிமையாளர் உட்பட நான்கு பேர் சிறையில் அடைப்பு

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: உதகையில் கட்டிடம் இடிந்து 6 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக கட்டிட உரிமையாளர் உட்பட நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே லவ்டேல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகரில் நடந்த மண் சரிவு விபத்தில் கட்டிட தொழிலாளர்களான ஆறு பெண்கள் உயிரிழந்தனர். 4 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர். உயிரிழந்த பெண்களின் பிரேத பரிசோதனை உதகை அரசு மருத்துவமனையில் நடக்கிறது. இதனால், அவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மருத்துவமனை முன்பு கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர். உடல்களை அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த விபத்து சம்பந்தமாக லவ்டேல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்காத நிலத்தின் உரிமையாளர் பிரிட்ஜோ, காண்ட்ராக்டர் பிரகாஷ், சூப்பர்வைசர் ஜாகீர் அஹமத் மற்றும் மேஸ்திரி ஆனந்தராஜ் ஆகியோர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE