உதகை அருகே 6 பேர் உயிரிழந்த சம்பவம்: விதிமீறில் பங்களாவுக்கு ‘சீல்’ வைப்பு

By செய்திப்பிரிவு

உதகை: உதகை அருகே கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தையடுத்து, சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு உதகை நகராட்சி அலுவலர்கள் நேற்று ‘சீல்’ வைத்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே லவ்டேல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் பங்களா கட்டுமான பணி நேற்று நடந்து வந்தது. அந்த பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள், அருகிலிருந்த கழிப்பிட கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உதகை பி1 போலீஸார் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக பங்களா கட்டுமானப் பணி முறையான அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என உதகை நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அதில் கட்டுமான பணியில் விதிமீறல் இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவின் பேரில் இந்த கட்டிடத்துக்கு உதகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் நேற்று ‘சீல்’ வைத்தனர். இது தொடர்பான நோட்டீஸ் அந்த கட்டிடத்தில் ஒட்டப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உதகை உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனியார் கட்டுமான பணிகள் முறையாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப் படுகிறதா, பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப் படுகிறதா என மாவட்ட நிர்வாகத்தினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE