மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் அருகேயுள்ள செருபாலக்காடு கிராமத்தில் வரும் 18-ம் தேதி காலை 7 மணி முதல் பகல் ஒரு மணி வரை மாட்டுவண்டிப் பந்தயம் நடத்த அனுமதி வழங்கக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.எஸ்.முகமது முகைதீன் வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள், "மாட்டுவண்டிப் பந்தயம் மற்றும் ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்? ஒரு சில காவல் நிலையங்கள் அனுமதி வழங்குகின்றன. சில காவல் நிலையங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. இது ஏன்? இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மாநிலம் முழுவதும் உரிய விதிமுறைகளை வகுத்து, அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக காவல் துறை தரப்பில் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.