“அதிமுகவில் செயல்படாதவர்களே பாஜகவில் இணைந்திருப்பார்கள்” - கே.பி.முனுசாமி கருத்து

By கி.ஜெயகாந்தன்

கிருஷ்ணகிரி: “அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள் என்றால், அநேகமாக அவர்கள் கட்சியில் செயல்படாதவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். அதிமுகதான் தமிழகத்தில் மிகப் பெரிய கட்சி” என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “பர்கூரில் நடைபெறும் விழாவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் இணைய உள்ளனர்.

அதிமுக எம்எல்ஏ-க்கள் பிஜேபியில் இணைய உள்ளதாக தகவல் வந்தது. அப்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜக வில் இணைந்திருக்கிறார்கள் என்றால் அநேகமாக அவர்கள் கட்சியில் செயல்படாதவர்களாக தான் இருந்திருப்பார்கள். அதிமுகதான் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி, தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது. 2 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கத்தின் தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும். அதிமுக தலைமையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளை சேர்த்துக்கொள்வோம்” என கூறினார்.

இதனையடுத்து பாஜக கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக் கொள்வீர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அதற்கு முனுசாமி “இது முடிந்த கருத்து. இனி கேள்வி கேட்க அவசியமில்லை” என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE