அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் @ பாஜக பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில், 10 நாள்களுக்கு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது இந்த பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், இது பொய் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்கு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்துக்கு உதவியாக இருந்த அமர் பிரசாத் ரெட்டிக்கு எதிராக உள்நோக்கத்தோடு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது காவல்துறை தரப்பில், அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யவில்லை. அவர் சார்ந்த கட்சியின் பெண் நிர்வாகியை, தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார். அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் நிர்வாகியே இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார் என்று கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 10 நாள்களுக்கு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமர் பிரசாத் ரெட்டிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவ்வாறு ஆஜராகாவிட்டால் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரி காவல்துறை மனுதாக்கல் செய்யலாம் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE