சாதிவாரி கணக்கெடுப்புக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி அழுத்தம் கொடுக்க வேண்டும்: பாமக

By செய்திப்பிரிவு

சென்னை: "சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஓங்கி குரல் கொடுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது கூட்டணி கட்சியான திமுக ஆளும் தமிழகத்தில் இதை அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1881 முதல் 1931 வரை முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பிறகு நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.1941-ல் இரண்டாம் உலக போர் காரணமாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் 1951-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தேவையற்ற அரசியல் நிர்பந்தங்களை ஏற்படுத்திவிடும் என்றும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு முடிவெடுத்தார் . தொடர்ந்து, பல்வேறு அரசு மாறினாலும் அரசின் முடிவில் மாற்றம் இல்லை. 2011-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சமூக பொருளாதார கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டது.

ஆனால், அப்போது 40,000 சமூகங்கள் இருப்பதால் அதை வகைப்படுத்தி கூறுவதில் சிக்கல் இருப்பதாகக்கூறி அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது இந்நிலையில் தான், தனது பாட்டனார் நேரு செய்த தவறை திருத்தும் வகையில் மீண்டும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த அக்டோபரில் வலியுறுத்தினார்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் இதை ராகுல் காந்தி வலுவாக முன்வைத்தார். இதற்கிடையே வடமாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் சாதி வாரி இடஒதுக்கீடு கோரிக்கையை ராகுல் காந்தி கைவிட்டுவிடக்கூடும் என்ற கருத்து நிலவியது.

ஆனால், அதையெல்லாம் மீறி சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக ராகுல் காந்தி மீண்டும் குரல் கொடுத்துள்ளது சமூக நீதியின் மேல் நம்பிக்கையுள்ள அமைப்புகளுக்கு ஆறுதலாக உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டபோது ராகுல் காந்தி, நாட்டில் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதம் என்பதை உடைத்தெறிவோம் என்றும், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இது நிறைவேற்றப்படும் என்றும், தலித், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு குறைக்கப்படாது என்றும் பேசியிருப்பது வரவேற்புக்குரியது.

மேலும் முறையான இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருப்பது சமூக அநீதி என்றும் பேசியிருப்பது பாராட்டுக்குரியது. சாதிவாரி கணக்கெடுப்பு தேசிய அளவில் நடத்தப்படாமல் இருப்பது, இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பதவி உயர்வில் இதர பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படால் இருப்பது ஆகியவை இதர பிற்பட்டோர் இடஒதுக்கீட்டில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகவும், 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை உடைத்தெறிவோம் என ராகுல் காந்தி பேசியதோடு மட்டுமல்லாது காங்கிரஸ் ஆட்சி செய்யும் தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அறிவுறுத்த வேண்டும் என்பது சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களின் விருப்பமாக உள்ளது

குறிப்பாக சமூக நீதிக் காவலன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என ராகுல் காந்தி அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE