பாஜக பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கு: அமர் பிரசாத் ரெட்டி முன்ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை அவரை கைது செய்யக் கூடாது என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது இந்த பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால் அது விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனவும் காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த மனுவுடன் சேர்த்து அமர் பிரசாத் ரெட்டியின் மனுவும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். அப்போது அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், "இது ஒரு பொய் வழக்கு. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மனுதாரரால் அன்றாட பணிகளைக்கூட மேற்கொள்ள கூட முடியவில்லை. எனவே, வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக இருந்தால், அதுவரை கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்.7) ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE