ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள் கார்த்தி எம்.பி.க்கு எதிராக மாறியது எப்படி?

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், வரும் மக்களவைத் தேர்தலில் அவரது மகன் கார்த்திக்கு சீட் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1999-ம் ஆண்டு தேர்தலில் தமாகா சார்பில் நின்ற ப.சிதம்பரத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் வெற்றி பெற்றார். மீண்டும் ப.சிதம்பரம் காங்கிரஸில் இணைந்ததை அடுத்து 2004-ம் ஆண்டு தேர்தலில் இ.எம்.சுதர்சன நாச்சியப்பனுக்கு சீட் மறுக்கப்பட்டது. அப்போது ப.சிதம்பரம் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். அதேநேரம் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் மாநிலங்களவை உறுப்பினராகி, மத்திய இணை அமைச்சரானார்.

அப்போதிருந்தே இருவரும் எதிரும், புதிருமாகச் செயல்பட்டு வருகின்றனர். 2019-ம் ஆண்டு தேர்தலில் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் தரக் கூடாது என இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் போர்க்கொடி தூக்கினார். அவரது எதிர்ப்பையும் மீறி சீட் வாங்கி கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலிலும் கார்த்திக்கு சீட் கொடுக்கக் கூடாது என இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தி வருகிறார். அவருக்கு வலுச் சேர்க்கும் விதமாக ப.சிதம்பரம் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம், முன்னாள் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர்.

சுதர்சன நாச்சியப்பன்

கே.ஆர்.ராமசாமி

இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆன பின்பு, ப.சிதம்பரத்திடம் நெருக்கமாக இருந்த முன்னாள் எம்எல்ஏ சுந்தரத்துக்கு, முக்கியத்துவம் குறைந்தது. தற்போது காரைக்குடி எம்எல்ஏவாக உள்ள மாங்குடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாங்குடி மனைவி தேவிக்கு எதிராக சுந்தரம் வேலை செய்தார். இதனால் சுந்தரத்தை ஓரம் கட்டினர். அதேபோல் ப.சிதம்பரத்துக்கு நெருக்கமாக இருந்த கே.ஆர்.ராமசாமி, 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ஆதரவாளரான வேலுச்சாமியை காரைக்குடி தொகுதியில் நிறுத்த முயற்சி செய்தார்.

மாங்குடி

ஆனால், கார்த்தி தனது ஆதரவாளரான மாங்குடிக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். அப்போதே கார்த்தி தரப்புக்கும், கே.ஆர்.ராமசாமி தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் ப.சிதம்பரம் ஆதரவாளராக இருந்த அப்போதைய மாவட்டத் தலைவர் சத்திய மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளை மாற்ற கார்த்தி முடிவு செய்தார். இதனால் அவரும் கார்த்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினார். இதையடுத்து சத்தியமூர்த்தியை நீக்கவிட்டு, தனது ஆதரவாளரான சஞ்சய் காந்தியை மாவட்டத் தலைவராக நியமிக்க கார்த்தி நடவடிக்கை எடுத்தார்.

தற்போது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். ஆனாலும் அவர் அதைக் கண்டுகொள்ளாமல் தனக்கு எப்படியும் சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE