ஓசூர்: தேன்கனிக்கோட்டை அதன் சுற்றி உள்ள மலைகிராமங்களில் அம்மை நோய் பரவலை தடுக்க மருத்துவ முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அதன் சுற்றி உள்ள பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. தற்போது நிலவும் சீதோசன நிலை மாற்றத்தால் தேன்கனிக்கோட்டை அடுத்த பேவநத்தம், காடுலக்கசந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அப்பகுதி மலைவாழ் மக்கள் அம்மை தாக்கி உள்ள குழந்தைகளுக்கு மருத்துவமனைக்கு செல்லாமல், இயற்கை வைத்தியம் மூலம் அம்மை நோய்க்கு சிகிச்சை அளித்துக்கொள்கின்றனர். இப்பகுதிகளில் அம்மை நோய் வேகமாக பரவி வருவதால், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர். மேலும் அம்மை நோய் குறையாத குழந்தைகளுக்கு மருந்தகங்களிலும் மற்றும் மருத்துவம் படிக்காக போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இப்பகுதிகளில் அம்மை நோய் பரவலை தடுக்க மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என கடந்த 2–ம் தேதி இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று காடுலக்கசந்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அம்மை பரவலை தடுக்க மருத்துவ முகாம் நடந்தது. இதில் அக்கிராமத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.