மூன்று நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்

By செய்திப்பிரிவு

சென்னை: மூன்றுநாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக இன்று (பிப்.4) டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து 'விஸ்தாரா' பயணிகள் விமானத்தில் ஆளுநர் டெல்லி சென்றார். ஆளுநர் உடன், அவரது செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர்.

இந்த மூன்று நாள் பயணத்தில், டெல்லியில் உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனையில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி பயணம் முடிந்து வரும் பிப்.6ம் தேதி இரவு ஆளுநர் சென்னை திரும்ப உள்ளார்.

முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 2024-25-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வரும் 19-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE