தமிழகத்தில் இரு வேறு இடங்களில் கார் விபத்து - மூவர் உயிரிழப்பு

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இன்று (ஜன.4) காரும் ஆட்டோவும் மோதிக்கொண்டதில் தாய், தந்தை உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.கோவிந்தன்(60). இவரது மனைவி உமா மகேஸ்வரி(50). மகன் பிரவீன் சுந்தர். இவர்கள் 3 பேரும் திருச்சி வழியாக திருவண்ணாமலை நோக்கி ஆன்மிக சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். காரை பிரவீன் சுந்தர் ஓட்டியுள்ளார். புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் பகுதியில் சென்றபோது, காரும் எதிரே வந்த கனரக ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில், கோவிந்தன், உமா மகேஸ்வரி ஆகியோர் அந்த இடத்திலேயே உயரிழந்தனர். படுகாயம் அடைந்த பிரவீன் சுந்தர், சத்தியமங்கலம் நெடுஞ்சேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் எஸ்.கவுதம்(20) ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே விபத்து: இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, ஆம்பூரில் இருந்து ஏலகிரி மலை நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலி மீது மோதி விபத்து ஏற்பட்டது. வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற கார், தடுப்பு வேலி மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE