டெல்டாவில் சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறப்பு

By த.சக்திவேல்

மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீர் இன்று மாலை முதல் திறந்து விடப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டில் அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்ததாலும், பருவமழையை எதிர்பார்த்தும், உரிய நாளான ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, நீர்மட்டம் 103 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 867 கன அடியாகவும், நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. ஆனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு மாதந்திர நீர் பங்கீட்டை வழங்காததாலும், நீர்வரத்து குறைந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பின்னர், டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு கடந்த அக்டோபர் 10-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை 90 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 41 ஆண்டுகளுக்கு பிறகு, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 71 அடியாக கிடுகிடுவென உயர்ந்தது.

நடப்பாண்டில், வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததாலும், நீர் பற்றாகுறையாலும், டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைத்து, 298 கிராமங்களில் கள ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழு அறிக்கையின் படி, திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கர் என 22,774 ஏக்கர் சம்பா பயிர்களை காத்திட, மேட்டூர் அணையில் இருந்து 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தற்போது, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு இன்று காலை 107 கன அடியாகவும், நீர் மட்டம் 70.42 அடியாகவும், நீர் இருப்பு 33 டிஎம்சியாகவும் இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணி முதல் பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீர், அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாகவும் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28-ம் தேதி நிறுத்தப்படுவது வழக்கம். அதேபோல, காலதாமதமாக தண்ணீர் திறந்தாலும், கால நீட்டிப்பு செய்யப்படும். ஆனால், டெல்டா பாசன காலம் முடிந்த பிறகு, மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோல், பிப்ரவரி மாதத்தில் தண்ணீர் திறப்பதும் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE