நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை: என்ஐஏ தகவல் @ உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராக சட்டத்துக்குட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு பொறியியல் பட்டதாரிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்தது. சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியது. அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தியது. இந்நிலையில், என்ஐஏ அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை முடக்கும் வகையிலும், கட்சியினருக்கும், அனுதாபிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. என்ஐஏ-வின் விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அனைவரும் தயாராக இருக்கிறோம். எனவே, அதற்கு உரிய கால அவகாசத்தை வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்குக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினர் எந்த தேசவிரோத, சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டதில்லை. எனவே, என்ஐஏ அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு, அவசர வழக்காக நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சங்கர், சேவியர் பெஃலிக்ஸ் ஆகியோர், "கட்சி நிர்வாகிகளுக்கு காலையில் சம்மன் அளித்துவிட்டு உடனடியாக அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வெளியூரில் உள்ள நிர்வாகிகளுக்கும் காலையில் சம்மன் அனுப்பிவிட்டு சென்னையில் வந்து இன்றே ஆஜராக வேண்டும் என்று கூறுகின்றனர். இது சட்ட விதி மீறல். சில இடங்களில் என்ஐஏ சோதனையும் நடத்தியுள்ளனர். எனவே, சம்மன்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டனர்.

அப்போது, என்ஐஏ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “மனுதாரர் திங்கள்கிழமை 5-ம் தேதி ஆஜராக அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளார். அதை ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம், கைது நடவடிக்கை எதுவும் இருக்காது. சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE