கோவையில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவையில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை ஆலாந்துறையில் உள்ள ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித் என்ற ரஞ்சித் குமார். கோவை காளப்பட்டியில் உள்ள சரஸ்வதி கார்டனைச் சேர்ந்தவர் முருகன். இவர்கள் நாம் தமிழர் கட்சியில் முன்னாள் நிர்வாகிகள் ஆவார். இவர்களது வீடுகளுக்கு இன்று (பிப்.2) அதிகாலை 4 மணிக்கு என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் இரண்டு வாகனங்களில் வந்தனர்.

தொடர்ந்து அவர்களது வீடுகளுக்குச் சென்று சோதனை நடத்தத் தொடங்கினர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தினர். வீட்டில் சந்தேகத்துக்குரிய பொருட்கள், ஆவணங்கள் உள்ளதா என இந்த சோதனை நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு காவல்துறை நடத்திய சோதனையில் கைதுப்பாக்கி, வெடி மருந்து, முகமூடி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு பட்டதாரி வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் என்ஐஏ விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக கோவையில் மேற்கண்ட இடங்களில் சோதனை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடனான பண விவகாரம் காரணமாகவும் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் முருகன் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். ரஞ்சித் யுடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE