‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ் வழங்க வருவாய்த் துறைக்கு அதிகாரம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சாதி, மதமற்றவர் எனும் சான்றிதழை வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்க முடியாது. அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, எனக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என” மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க மாவட்ட தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை. பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி “சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டுக்குரியது. அதேவேளையில் இதுபோன்ற சான்றிதழ்களை வழங்கினால் சில பிரச்சினைகளும் ஏற்படும். இதுபோன்ற சான்றிதழை வழங்குவது சொத்து, வாரிசுரிமை மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும், அரசு உத்தரவுப்படி, கல்வி நிலையங்களின் விண்ணப்பங்களில், சாதி - மதம் தொடர்பான அந்த இடத்தை பூர்த்திசெய்யாமல், அப்படியே விட்டு விடலாம். அதற்கான உரிமை உள்ளது. அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது . சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு உத்தரவிட முடியாது” எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE