மத்திய சிறை சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன், தன்னை விடுதலை செய்து, குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28-ம்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முதல்வருக்கு கடிதம்: இதேபோல ராபர்ட் பயஸூம்,தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு இருவரும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர். இதையொட்டி, சிறப்பு முகாமில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE