கவனிப்பாரில்லா நிலையில் வைகை ஆறு - சோழவந்தானில் தெளிந்த நீரோடை; மதுரையில் கழிவு நீரோடை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழகத்தில் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடக்கும் ஒரே நகரமாக மதுரை திகழ்கிறது. அதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மதுரை நகரத்தில் கடந்த காலங்களில் நீர்நிலைகள் நிரம்பி ஓடி, விவசாயம் செழித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மக்கள் கொண்டாடும் விழாக்களில் மீனாட்சியம்மன் கோயிலும், அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலும் இணைந்து வைகை ஆற்றில் கொண்டாடும் சித்திரைத் திருவிழா, புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று வைகை ஆற்றில் நீராடி செல்வதை நேர்த்திக் கடனாக கொண்டுள்ளனர். தல்லாக்குளம், ஆத்திக்குளம், கரிசல் குளம், மாடக்குளம், பீபீ குளம் என தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நீர் நிலைகளின் பெயருகளையே வைத்து நீருக்கு மரியாதையை செய்துள்ளார்கள் இந்த நகரவாசிகள்.

இப்படி பல சிறப்புகளை பெற்ற மதுரை நகரில் தற்போது மக்கள், மதுரையின் நீர்நிலைகளை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. வைகையில் வெள்ளம் வந்தபோது சிவனே, வந்திக் கிழவிக்கு உதவியதாக திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்ற பிட்டுக்கு மண் சுமந்த கதை மூலம் அறிய முடிகிறது. ஆனால், சோழவந்தான் வரையுள்ள வைகை ஆறு, மக்கள் நீராடும் அளவிற்கு தெள்ளத்தெளிவாக தண்ணீர் ஓடுகிறது. மதுரை நகருக்கு உள்ளேயுள்ள வைகை ஆறு மக்கள் கால் வைக்க சங்கப்படும் அளவிற்கு தூர்நாற்றம் வீசும் கழிவு நீரோடையாக மாறியுள்ளது.

ஆகாய தாமரைச்செடிகள், கருவேலம் மரங்கள், ஆக்கிரமிப்புகள் என வைகை ஆறு அழிந்து கொண்டிருந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல் பாலங்கள், சாலைகள் அமைப்பதற்கும், வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள் போன்ற தொழில் வளர்ச்சிகளை பெருக்குவதற்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிச் செல்லும் நிலை மாறி கொசுக்களை உற்பத்தி செய்யுமிடமாகவும், மனிதர்களின் கழிவுகளை, மருத்துவக் கழிவுகளையும் கொட்டும் இடமாகவும் மாறிவிட்டது. இறைச்சிக் கழிவுகள், சாக்கடை நீர் கலப்பதால் வைகை துர்நாற்றமுடன் நோய் பரப்பும் இடமாக மாறிவிட்டது.

நகர்பகுதியில் அரசும், தனியாரும் கட்டிடங்கள் கட்டுவதற்கு போட்டிப்போட்டு மணல் அள்ளிய இடங்கள் இன்று அபாயகரமான பள்ளப்பகுதிகளாக உள்ளன. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றின் கரைகளை சுருங்கி சாலை அமைத்து, நீர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டன. நகர்பகுதியில் பெய்யும் மழையும், வைகை ஆற்றில் வராமல் ஆற்றின் இரு கரைகளிலம் காம்பவுண்ட் சுவரும் கட்டிவிட்டனர். அதனால், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும் மதுரை ஆற்றில் நீரோட்டம் குறைந்து காணப்படுகிறது. அதனால், வைகை ஆற்றில் இருந்து, மதுரையின் 28 கண்மாய்களுக்கு சென்ற தண்ணீர் செல்வவும் குறைந்து தற்போது அந்த நீர்நிலைகள் கழிநீர் தேங்குமிடமாகவும், வறட்சிக்கும் இலக்காகிவிட்டதாக நேற்று வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘வைகை ஆறு மட்டுமில்லாது, அதன் கிளை நதிகளும் ஆக்கிரமிப்புகுள்ளாகி, ஆற்றிற்கு நீர் வரத்து குறைந்தது. வைகை ஆற்றின் பிரதான கிளை நதியான கிருதுமால் நதி தற்போது கிருதுமால் கால்வாயாக மாறிவிட்டது. தேனி மாவட்டத்தில் தொடங்கும் வைகை ஆறு, சங்கிலித் தொடராக அதன் வழித்தடங்களில் உள்ள கண்மாய்களை நிரப்பி கடைசியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்களை நிரப்புகிறது. கடலுக்கு வைகை ஆறு நீர் செல்வது இல்லை. அப்படி முழுமையாக பயன்படும் வைகை நீர் தற்போது கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் எழுப்பியும், வழித்தடங்கள் பல இடங்களில் சாலைகள் போட்டு ஆக்கிரமிப்பு செய்ததால் தற்போது வைகை ஆற்றில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. இந்த கண்மாய்களும் மழை பொழிந்து நிரம்பினால் வேறு தடங்களில் நீர் செல்ல வாய்ப்பில்லை. அதனால், வைகை ஆற்றில் இருந்து கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்களின் ஆக்கிரமிப்பை அகற்றில் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE