கீழடியில் பத்தாம் கட்ட ஆய்வு விரைவில் தொடங்கும்: உயர் நீதிமன்றத்தில் அரசு பிளீடர் தகவல்

By கி.மகாராஜன் 


மதுரை: கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணிகளை விரைவில் தொடங்க அரசு நடவடக்கை எடுத்து வருகிறது என உயர் நீதிமன்றத்தில் அரசு பிளீடர் தெரிவித்தார்.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி, உயர் நீதிமன்ற கிளையில் 2016-ல் தாக்கல் செய்த மனு: வைகை ஆற்றங்கரை நாகரிகம் குறித்து கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் சங்ககால நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து மத்திய அரசிடம் அனுமதி பெற்று கீழடியில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இங்கு அகழாய்வு பணியை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.

கீழடியில் நடைபெற்ற 2ம்-கட்ட அகழாய்வில் 2200 ஆண்டு பழமையான 5000-த்துக்கும் அதிகமான பழங்கால பொருட்கள் எடுக்கப்பட்டன. இங்கு நன்கு கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் இயங்கி வந்ததற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் கீழடியில் 3-ம் கட்ட ஆய்வுப்பணியை தொடங்கும் நிலையில் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஜோத்பூரில் தொல்லியல் பொருட்கள் பாதுகாவலரான ஸ்ரீராமன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், 15 ஆண்டுகளாக தொல்லியல் பொருட்களை பாதுகாக்கும் பணியை மட்டுமே செய்து வந்துள்ளார். இவருக்கு அகழாய்வு பணியில் போதிய அனுபவம் இல்லை. அகழாய்வு பணியில் முக்கியமான பணி பழங்கால பொருட்களின் உண்மையான காலத்தை கண்டறிவது (ரிப்போர்ட் ரைட்டிங்) ஆகும். இதில் தற்போதைய கண்காணிப்பாளருக்கு அனுபவம் கிடையாது. அகழாய்வு பணியில் சிறப்பாக செயல்பட்ட கண்காணிப்பாளர் இடமாறுதல் செய்யப்பட்டிருப்பது வரலாற்றை மறைக்கும் முயற்சி என கருதப்படுகிறது. எனவே அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாய்வு பணியை தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கனிமொழி மதி வாதிடுகையில், கீழடியில் சிறிய அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தவில்லை. மேலும் முதல் 3-ம் கட்ட சோதனையின் போது கிடைக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அருங்காட்சியகத்தில் வைக்கவில்லை. தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு குறித்த 1 முதல் 3 கட்ட அறிக்கையை ஒன்றிய தொல்லியல் துறை வெளியிடப்படவில்லை என்றார்.

அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், கீழடியில் 9 கட்ட அகழாய்வு நிறைவடைந்து, 10-ம் கட்ட அகழாய்வு பணியை விரைவில் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அகழாய்வு பணிகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. அகழாய்வில் கிடைத்த பொருட்களின் வரலாற்று தொடர்பான விவரங்களை மத்திய அரசு தான் தெரிவிக்க வேண்டும் என்றார்.

மத்திய தொல்லியல் துறை வழக்கறிஞர் வாதிடுகையில், தற்போது கீழடி அகழாய்வு பணிகளை முழுக்க முழுக்க மாநில அரசே மேற்கொண்டு வருகிறது. முதல் 3 கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கீழடி அகழாய்வு பணிகள் மேற்கொள்வது குறித்தும், மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு பணிகள், அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE