திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்க நிதி முறைகேடு புகாரில் 8 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்க முறைகேடு புகார் தொடர்பாக 2016-ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக திநகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி, கடந்த 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸார் விசாரணையை முடிக்கவில்லை எனக்கூறி ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, காவல்துறை வழக்கறிஞர் டிசம்பர் 12-ம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான சிசிடிவி காட்சிளை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த இளவரசு தரப்பு வழக்கறிஞர், "டிசம்பர் 13-ம் தேதிதான்அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததார். டிசம்பர் 12-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் படப்பிடிப்பில் இருந்தார். காவல்துறையினர் சமர்ப்பித்துள்ள சிசிடிவி காட்சிகள் போலியானவை" எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார்? என்பதற்கான மொபைல் லொகேஷன் விவரங்களையும், சிடிஆர் என்று சொல்லக்கூடிய மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதன்படி, காவல்துறை சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை ஆய்வு செய்த நீதிமன்றம், இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரானதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம். டிச.12-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதை கூறி மன்னிப்பு கோரினால், அதனை ஏற்க தயார். இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இளவரசு தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஒளிப்பதிவாளர் சங்க முறைகேடு தொடர்பாக, 2016-ம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை ஏற்க முடியாது. அனைத்து வழக்குகளிலும் காவல்துறை மெத்தனமாகவே நடந்த கொள்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் செயல் கண்டனத்துக்குரியது. சங்க நிதியை முறைகேடு செய்ததாக தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, சாதாரண மனிதர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுபோன்ற பல வழக்குகளில் காவல்துறை தாமதமாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்கிறது. எனவே, சங்க முறைகேடு தொடர்பாக 2016-ல் கொடுக்கப்பட்ட புகார் மீது 8 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் பிப்ரவரி 5-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE