மெட்ரோ வாகன நிறுத்தத்தில் காலி இடங்கள் நிலவரம்: செல்போன் செயலி மூலம் பார்க்கும் வசதி தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களில் காலி இடங்களின் நிலவரத்தை தெரிந்துகொள்ளும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது சி.எம்.ஆர்.எல்.செயலியில் அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்து வருகின்றனர். பயணிகள் தங்கள் வீடுகளிலிருந்து இருசக்கர வாகனங்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர்.

இதற்கேற்ப 41 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், 28 மெட்ரோரயில் நிலையங்களில் கார்களைநிறுத்தும் வசதியும் உள்ளது. மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாகன நிறுத்த பகுதிகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகன நிறுத்தம் ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், பயணிகளின் ஏமாற்றத்தைப் போக்க, வாகனம் நிறுத்தும் பகுதிகளில் காலிஇடங்களின் நிலவரத்தை தெரிந்துகொள்ளும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, சி.எம்.ஆர்.எல். செயலியில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்ட்ரல், விமான நிலையம் உட்படபல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்கள் காலையிலேயே நிரம்பி விடுகின்றன. இதனால், பயணிகள் வாகன நிறுத்தும் இடத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் பகுதிகளில் காலியாகவுள்ள இடங்கள், வாகனங்களை வகை வாரியாக, பயணிகள் அறிந்து கொள்ளும் வசதி சி.எம்.ஆர்.எல். செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்துக் கொண்டால், பயணிகள் வீண் அலைச்சலைத் தவிர்க்க முடியும்.

ஆனாலும், கூடுதல் வாகனங்களை நிறுத்த வசதியாக, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகே காலியாக உள்ள இடங்களைத் தேடும் முயற்சியும் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE