தவறான சிகிச்சை - மூணாறில் பெண் தொழிலாளி போராட்டம்

By என்.கணேஷ்ராஜ்

மூணாறு: தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி மூணாறில் தேயிலை தோட்ட தொழிலாளி பேராட்டத்தில் ஈடுபட்டார்.

கேரள மாநிலம் மூணாறு அருகே தேவி குளத்தைச் சேர்ந்த பாக்கிய ராஜ் மனைவி செல்வமணி ( 44 ) தேயிலை தோட்ட தொழிலாளி. உடல்நலக் கோளாறு ஏற்பட்ட இவருக்கு கடந்த ஆண்டு தேயிலை தோட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது இவரது கர்ப்பப்பை அகற்றப்பட்டது. சிறுநீர் வெளியேறுவதற்காக குழாய் சிலவாரங்களில் அகற்றப்பட்டது. அதன் பிறகும் சிறுநீர் பிரச்னை தொடர்ந்தது. இந்நிலையில் தவறான சிகிச்சையால் தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி மூணாறு காந்தி சிலை முன்பு செல்வமணி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து இவரது அவர் கூறுகையில், "வயிறு வலி பிரச்சினைக்காக சென்றேன். கர்ப்பப்பையில் பிரச்சினை இருப்பதாகக் கூறி அதனை அகற்றினர். இந்நிலையில் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது. தேயிலை தோட்ட எஸ்டேட் நிறுவனம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் இது குறித்து பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தவறான சிகிச்சையால் தற்போது நடமாட கூட முடியாத நிலை உள்ளது" என்றார். காவல் துறையினரும், தொழிற்சங்க நிர்வாகிகளும் தொழிலாளி மற்றும் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE