சென்னை அரசு மருத்துவமனையில் சாந்தனுக்கு தீவிர சிகிச்சை

By செய்திப்பிரிவு

சென்னை: கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம்ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த 24-ம் தேதி அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து, அவர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, “சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு (சிரோஸிஸ்) மற்றும் பிற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE