லிப்டில் சிக்கிய மேற்குவங்க கால்பந்து வீராங்கனைகள் மீட்பு @ சென்னை

By செய்திப்பிரிவு

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க மாநில வீராங்கனைகள் 23 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வீராங்கனைகள் ஓட்டலில் இருந்து, போட்டி நடைபெற இருக்கும் மைதானத்துக்கு நேற்று மதியம் புறப்பட்டனர். ஓட்டல் லிப்டில் ஏறிய 10 வீராங்கனைகள், தரை தளத்துக்கு வந்தனர்.

அப்போது, திடீரென பாரம் தாங்காமல், முதலாவது தளத்தில் லிப்ட் சிக்கிக் கொண்டது. இதில், உள்ளே சிக்கிக் கொண்ட 10 வீராங்கனைகளும் லிப்ட் திறக்க போராடினர். ஆனால் அவர்களால் திறக்க முடியவில்லை. சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு, வீராங்கனைகளின் சப்தம் கேட்டு ஓடி வந்த ஓட்டல் ஊழியர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ஸ்டீபன் குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து வீராங்கனைகளை மீட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE