“இனிய குரல் என்றென்றும் ஒலிக்கும்” - பவதாரிணிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல பின்னணி பாடகி பவதாரிணி மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இசைஞானி இளையராஜாவின் மகளும், பிரபல இசையமைப்பாளருமான பவதாரிணி (47) இலங்கையில் காலமானார் என்று துயரச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.’

இசைக் குடும்பத்தில் இளையராஜா - ஜீவா தம்பதியருக்கு 1976ஆம் ஆண்டு பிறந்த பவதாரிணி தனது தனித்த முயற்சியாலும் திறமையாலும் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடகியாக திகழ்ந்தவர். இவரது ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடல் தேசிய விருதை வென்றது. பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடல்களை பாடியுள்ளார். இவரது இனிய குரல் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

இசை உலகின் சிகரம் நோக்கி பயணித்த பவதாரிணியின் உடல் நலனை தாக்கிய புற்று நோயை எதிர்த்து போராடிய போதிலும், மருத்துவம் தோற்றுப் போனது. பெண் குலத்துக்கு பெருமை சேர்த்து வந்த இசை மகளை இழந்து விட்டோம்.

பவதாரிணியின் தாயார் ஜீவா 2011 அக்டோபர் மாதம் காலமாகிவிட்டார். தந்தையார் இசைஞானி இளையராஜாவுடன் அவரது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இருக்கின்றனர். அவர்களை என்ன சொல்லியும் ஆற்றுப்படுத்த இயலாது. காலம் தான் அவர்களை தேற்றி ஆற்றுப்படுத்த வேண்டும்.

இசைவாணி பவதாரிணியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் இளையராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், இசை உலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE