பிரபல பாடகி பவதாரிணி மறைவு: தலைவர்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 47.

இசையமைப்பாளர் இளையராஜவின் மகளான இவர், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரி.

கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் இன்று மாலை சென்னை கொண்டுவரப்படும் என தெரிகிறது.

மறைந்த பவதாரிணி, கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’ உட்பட பல படங்களில் பாடியுள்ளார்.

நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர் மை பிரண்ட்' , பிர் மிலேங்கே ஆகிய இந்திப்படங்களுக்கும் தமிழில் இலக்கணம், அமிர்தம் உட்பட சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் விளம்பரநிர்வாகி சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தலைவர்கள் இரங்கல்: பவதாரிணி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: பவதாரிணி இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: பவதாரணியை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பவதாரிணி மறைந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இளம் வயதிலேயே தேசிய விருது வென்றவர். அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இதேபோன்று, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE