விஜயகாந்துக்கு பத்ம பூஷண் - தமிழகத்தில் யார் யாருக்கு பத்ம விருதுகள்?

By செய்திப்பிரிவு

சென்னை: ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வைஜெயந்திமாலா: இந்திய சினிமா பிரபலம் மற்றும் நடனக் கலைஞரும் ஆவார். 91 வயதான அவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் . அவருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மா சுப்ரமண்யம்: நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமண்யம், மாநில அளவிலும், தேசிய அளவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு விருதுகளை தனது கலை பயணத்துக்க வென்றுள்ளார். 80 வயதான அவர் கடந்த 1981-ல் பத்மஸ்ரீ விருதையும், 2003-ல் பத்ம பூஷண் விருதையும் வென்றுள்ளார். இந்த சூழலில் தற்போது அவருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்: தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். தேமுதிக-வின் நிறுவனத் தலைவர். கடந்த டிசம்பரில் அவர் காலமானார். இந்த சூழலில் அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பன்: 87 வயதான கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் பத்திரப்பன் பத்மஸ்ரீ விருதை வென்றுள்ளார். புராணம் மற்றும் இந்திய வரலாற்றை தனது கலை மூலம் பரப்பி வருகிறார். தனது கலையில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய வழக்கத்தை தகர்த்து பெண்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.

ஜோஷ்னா சின்னப்பா: 37 வயதான சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை. உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இந்த சூழலில் அவருக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ டி குரூஸ்: எழுத்தாளர் ஜோ டி குரூஸ், சாகித்ய அகாடமி விருதை இவரது படைப்பு வென்றுள்ளது. இந்த சூழலில் அவருக்கு பத்மஸ்ரீ விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி. நாச்சியாருக்கு மருத்துவத் துறையில் பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

சேசம்பட்டி டி.சிவலிங்கம்: தமிழகத்தை சேர்ந்த நாதஸ்வர கலைஞரான சேசம்பட்டி டி.சிவலிங்கத்துக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE