மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு மூலம் மீனவர் பிரச்சினையை தீர்க்கவும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: மீன்பிடிக்க 2 படகுகளில் சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த ஜன.22-ல் கைது செய்துள்ளனர். இத்தகைய போக்கு, பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பறிப்பதுடன், மீனவ மக்களிடம் அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது. மீனவ சமூகங்களின் கலாச்சார, பொருளாதார கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, உரிய தூதரக வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா - இலங்கை இடையே கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.

அப்பாவி மீனவர்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்கவும், இந்திய மீனவர் - இலங்கை கடற்படையினர் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கை குழுவை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை காவலில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE