வீரமாமுனிவருக்கு மணிமண்டபம், நாமக்கல் கவிஞருக்கு சிலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: வீரமாமுனிவர் மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் மார்பளவு சிலை, கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் ஆகியவற்றை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி உருவச்சிலை உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இத்தாலியைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கிஎன்ற இயற்பெயரை கொண்ட வீரமாமுனிவர், “தமிழ் அகராதியின் தந்தை” எனப் போற்றப்படுகிறார். அவர், தமிழ் மொழிக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள மாபெரும் தொண்டுகளைப் போற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி கிராமம், புனிதபரலோக மாதா ஆலய வளாகத்தில் ரூ.1 கோடியில் வீரமாமுனிவரின் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அதேபோல், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவை போற்றிடும் வகையில்,அவருக்கு நாமக்கல் நகரில் அவரது நினைவு இல்லத்தில் மார்பளவு சிலை ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்டது. மேலும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சொற்றொடரைப் பொற்றொடராக உலகுக்கு வழங்கிய சங்கப் பெரும்புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம்,மகிபாலன்பட்டியில் மார்பளவு சிலை மற்றும் நினைவுத்தூணை முதல்வர் திறந்து வைத்தார்.

கடந்த 1750-களில் மிகப் பெரிய பெண்கள் படையணியை கட்டி வீரச்சமர் புரிந்தவர் அரசியார் வேலுநாச்சியார். அவரது வளரிப் படைக்கு தலைமை வகித்தவர்வீரத்தாய் குயிலி. வேலுநாச்சியாரின் வெற்றிக்காக தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தார். குயிலியின் தியாகத்தை போற்றிடும் வகையில், சிவகங்கை வட்டம், ராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் உருவச்சிலை நிறுவப்பட உள்ளது.

அதேபோல், வெள்ளையர்களின் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து கி.பி.18-ம் நூற்றாண்டில் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலத்துக்கு, சிவகங்கை வட்டம், நகரம்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை நிறுவப்படுகிறது. அதேபோல், மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வெண்ணிக் காலாடியின் நினைவைப் போற்றும் வகையில்தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவல் கிராமத்தில் ரூ. 50 லட்சம்செலவில் உருவச்சிலை நிறுவப்படுகிறது.

மேலும், சுதந்திரப் போராட்டகாலத்தில் அண்ணல் காந்தியடிகள், பொதுவுடைமை சிந்தனையாளர் தோழர் ஜீவாவை சிவகங்கைமாவட்டம், சிராவயல் கிராமத்தில்சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்நினைவாக அங்கு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அரங்கம் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதாஆர்.ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, செய்தித்துறை செயலர் ஆர். செல்வராஜ், செய்தித்துறை இயக்குநர் ப.அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE