முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் | முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் கடந்த 2021-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மாநில மகளிர் கொள்கைக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வரும் 28-ம்தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் முதலீட்டாளர் மாநாடுகளில் பங்கேற்று, தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக தொழில் துறை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 5-ம் தேதி தமிழகம் திரும்புகிறார். அதன்பிறகு, பிப்ரவரி 2-வது வாரத்தில் சட்டப்பேரவையின் இந்தஆண்டுக்கான முதல் கூட்டம்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பதால், அதற்கான பணிகளை நிதித் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. மருத்துவ சிகிச்சையில் உள்ள வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் தவிர்த்து மற்ற அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, அரசுத் துறை செயலர்கள் உதயச்சந்திரன் (நிதி), வி.அருண்ராய் (தொழில்),நந்தகுமார் (பொது) உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சட்டப்பேரவை ஆண்டு கூட்டம், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், மாநில நிதிநிலை, கலால்வரி சட்டத் திருத்தம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டுள்ளது.

7 நிறுவனங்களுக்கு சலுகை: சென்னையில் ஜனவரி 7, 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில், ரூ.6.64 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற 7 நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மகளிர் கொள்கை: அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களுக்கான சம வாய்ப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல், பாதுகாப்பான வாழ்வுரிமை, கண்ணியம் காத்தல் ஆகியவற்றை உறுதிசெய்யவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும், அரசியலில் வாய்ப்பு பெற அவர்களை தயார்படுத்துவதற்கும், உரிமை பெற்றுத் தரவும், அவர்களது ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும் மாநில மகளிர் கொள்கையை நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு உருவாக்கிஉள்ளது. தமிழகத்தில் பெண்களின் நியாயமான உரிமைகளை பெற்றுத்தரும் வகையில் 2021 டிசம்பரில் வரைவு கொள்கை வெளியிடப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த கொள்கைக்கு இறுதி வடிவம் வழங்கப்பட்டு, தற்போது அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியபோது, ‘‘தேசிய மகளிர் கொள்கை கடந்த 2001-ல்வெளியிடப்பட்டது. 23 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழக அரசு சார்பில் மாநில மகளிர் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் 2021-ல் பொறுப்பேற்றதும், மாநில மகளிர் கொள்கை அறிவிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பெண்களுக்கான வளர்ச்சிக்காகவும், பெண்களுக்கு நிர்வாக பயிற்சி, நிதி மேலாண்மை பயிற்சி, தொழில் தனி வணிக குறியீடு, மானியம், பொருளாதார வசதி ஏற்படுத்துதல், விவசாய தொழிலாளருக்கு சம ஊதியம் வழங்குதல் போன்றவை இதன் முக்கிய அம்சம். ‘பெண்களின் வளர்ச்சியை நோக்கி அரசின் திட்டங்கள்’ என்ற அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE