சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: ஓஷன் குரூப் நிறுவனத்தின் ரூ.450 கோடி சொத்து பறிமுதல் - அமலாக்கத் துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சட்ட விரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் ஓஷன் குரூப் நிறுவனத்தின் ரூ.450 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓஷன் குரூப் நிறுவனம், கடந்த ஆண்டு ரூ.1,000 கோடி முறைகேடாக வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாட்டு முதலீடுகள், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

இதையடுத்து, அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் தன்னைஇணைத்துக் கொண்டு, வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியது. அதன்படி, கடந்த 18-ம் தேதி சென்னையில் ஓஷன் குரூப் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. கிண்டியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகம், கோட்டூர்புரத்தில் உள்ள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது. சோதனையின்போது ரூ.33 லட்சம் ரொக்கம், ரூ.450 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE