மாநாடுக்கு பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் திருமாவளவன் மனு

By செய்திப்பிரிவு

சென்னை: விசிக சார்பில் ஜன.26-ம் தேதி வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது. இது தொடர்பாக கட்சியின் தலைவர் திருமாவளவன் டிஜிபியை சந்தித்து பாதுகாப்பு குறித்து மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வெல்லும் ஜனநாயகம் மாநாடுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், மாநாட்டையொட்டி சென்னை, மதுரை, தஞ்சாவூரில் இருந்து திருச்சி வரை நடைபெறும் சுதந்திர சுடர், சமத்துவச் சுடர், சகோதரத்துவ சுடர் என்ற சுடர் ஓட்டங்களுக்கு பாதுகாப்பு தரக் கோரியும் டிஜிபியிடம் மனு அளித்துள்ளேன். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

இவர்களுடன் அரசியல் தலைவர்கள் டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்க விழாவாக இந்த மாநாடு அமைய உள்ளது. இந்தியா கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கான கால்கோல் விழாவாக இது அமையும். தேர்தல் நேரத்தில் மிக முக்கிய மாநாடாக இது ஒருங்கிணைப் படுகிறது. இதில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE