பூலித்தேவன் நினைவு தபால் தலை | மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் கருத்து

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்ற முறையில் பூலித்தேவன் நினைவு தபால் தலை வெளியிடுவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள்தான் பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த நேதாஜி இளைஞர் சங்க தலைவர் முத்து தாக்கல் செய்த மனுவில், "18-ம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள நெற்கட்டும்சேவல் பகுதியை ஆண்ட மன்னர் பூலித்தேவன். சிப்பாய் கலகத்துக்கு முன்பே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர் அவர். முதல் விடுதலை போராட்ட வீரர் என்ற முறையில், அவரது நினைவு தபால் தலையை வெளியிட உத்தரவிடக் கோரி 2023 ஆகஸ்ட்டில் மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு அடிப்படை உரிமைகளை மீறியதற்கு எதிரானதல்ல, என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் தான் பரிசீலிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE