மதுரை: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கும்பாபிஷேகம் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் (RSS) அலுவலகத்தில் ஸ்ரீராமஜென்ம் பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் காலை கோ-பூஜை நடத்தப்பட்டது. பின்னர் தற்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அலுவலகத்தின் முன்பாக மேடையில் அமைக்கப்பட்ட ராமர், சீதா, அனுமன் சுவாமி சிலைகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, தற்போது ஸ்ரீராம பஜனை நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான ராம பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ராம கோயில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்ற பின்னர் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கும்பாபிஷேகம் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு அலுவலகத்தின் முன்பாக உதவிஆணையர் தலைமையில் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.