அயோத்தி  ராமர் கோயில் கும்பாபிஷேகம் | தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக பொது விடுமுறை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை ( 22-01-2024 ) அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழக மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழக மக்களின் விருப்பதினை நிறைவேற்றும் வகையில், ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-01-2024 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE