திருவண்ணாமலை: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் நித்தீஷ்(20), சூர்யா(17), மணிகண்டன்(22), குணசேகரன்(20), கவுதம்(17), சூரஜ்(19). சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்(19). இவர்கள் 7 பேரும் சென்னை வண்டலூர்அருகே உள்ள தனியார் கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.இவர்கள், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆளியூர் கிராமத்துக்கு காரில் வந்தனர். காரை, மணிகண்டன் என்பவர் ஓட்டினார்.
வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் தென்னாங்கூர் கிராமம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர சிறுபாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நித்தீஷ் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சூர்யா, மணிகண்டன், குணசேகரன், கவுதம், சூரஜ்,புவனேஷ் ஆகியோரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அனைவரும் உயர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மற்றும் சென்னை மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். வந்தவாசி வடக்கு காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.