அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா: புதுச்சேரியில் 22-ம் தேதி அரசு விடுமுறை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி புதுச்சேரியில் வரும் 22-ம் தேதி அரசு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காணொலியில் காண புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் ஏற்பாடு செய்ய இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22ம் தேதி சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் அரை நாள் விடுப்பு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊழியர்களிடமிருந்து வந்த அதிகப்படியான கோரிக்கை காரணமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, “ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி வரும் 22-ம் தேதி அரசு விடுமுறை விடப்படுகிறது. இதற்கான அரசு உத்தரவு விரைவில் வெளியாகும்” என்றார்.

கோயில்களில் பார்க்க ஏற்பாடு: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண காணொலியில் புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் ஏற்பாடு செய்ய இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பக்தர்கள் அனைவரும் காணொலி மூலம் காண வசதியுள்ள கோவில்களில் அன்று மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை புதுச்சேரி, காரைக்காலில் ஏற்பாடு செய்யவேண்டும். உச்சிகால பூஜை நடை சாத்தப்பட்டு, பிரகாரம் மற்றும் உள் மண்டபங்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பக்தர்கள் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாகங்களுக்கு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE