சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றம் தடை

By ஆர்.பாலசரவணக்குமார்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாகக் கூறி பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் (PUEU) சார்பில் இளங்கோவன் என்பவரும், அந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தங்களை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக சில ஊழியர்களும் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

இந்தப் புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சேலம் மாவட்டம் கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். முன்னதாக, இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தபோது, இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, காவல்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜன.19) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதங்களை முன்வைக்க இருப்பதால் வழக்கின் விசாரணையை சற்றுநேரம் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காவல்துறை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து விட்டதாகவும், அதிலிருந்து ஜெகநாதனின் செயல்பாடு எந்தவித குற்றநோக்கத்துடன் இருப்பதாகத் தெரியவில்லை எனக் கூறி, காவல்துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

ஆனால் விசாரணைக்கு தடைவிதிக்கக் கூடாது என காவல்துறை தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ‘தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்” எனக் கூறி, வழக்கின் விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE