புதுச்சேரி: ஹேக் செய்யப்பட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையின் அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கம் மீட்கப்பட்டது. தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருவார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு அவரது எக்ஸ் தள பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவரது எக்ஸ் பக்கம் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை வெளியிட்ட தகவலில், "எனது எக்ஸ் தள கணக்கை மீட்டெடுத்த தெலங்கானா காவல் துறை சைபர் கிரைம் பிரிவு, தெலங்கானா போலீஸார், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் ஆகியோருக்கு நன்றி. கடந்த மூன்று நாட்களாக எனது எக்ஸ் தள கணக்கை அணுக இயலவில்லை. தற்போது முழுமையாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. இனி முன்னோக்கி நகர்கிறேன். இத்தளத்தில் எனது நல்ல பணிகளை பகிர்வதை தொடர விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.