மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை உயிரிழப்பின்றி நடத்துவதே குறிக்கோள் என தமிழக விளையாட்டு துறை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவைத் தொடங்கிவைத்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுமார் 5 மணி நேரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு ரசித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசு பாதுகாப்புடன் சிறப்பாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. நிறைய பரிசுகள் அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உயிரிழப்பு இல்லாமல் நடத்துவதே குறிக்கோள். கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கம் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் திறக்க உள்ளார். இது சட்டமன்ற அறிவிப்பும் கூட. 5,000 பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என அமைச்சர் உதயநிதி கூறினார்.