சென்னை: நாளை முதல் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதற்கிடையே, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசானபனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை (ஜன.18) முதல் 20-ம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரியை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 60 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.