சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக சிறப்பு பேருந்து, ரயில்கள்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக, சிறப்பு பேருந்துகள், ரயில்கள் நேற்று முதல் இயங்கத் தொடங்கின.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையைஒட்டி, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தமாக 11,284 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 13-ம் தேதி மட்டும் திட்டமிடப்பட்டதை விட கூடுதலாக 309 பேருந்துகள் என மொத்தம் 4,310 பேருந்துகள் ஒரே நாளில் இயக்கப்பட்டன. இவ்வாறு 3 நாட்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் வாயிலாக சென்னையில் இருந்து 6.54 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.இதேபோல் ரயில்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து, ஊர் திரும்ப வசதியாக சென்னைக்கு நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் சென்னைக்கு வரும் 2,100 பேருந்துகளுடன் 2,028 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

வெளியூரில் இருந்து வருவோர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில், இன்று (ஜன.17) மற்றும் நாளை (ஜன.18) மாலை, இரவு வேளைகளில் 50 மாநகர பேருந்துகளும், நாளை (ஜன.18), நாளை மறுதினம்(ஜன.19) அதிகாலை ஆகிய வேளைகளில் 125 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது.

ரயில்களைப் பொருத்தவரை, வழக்கமான ரயில்கள், சிறப்பு ரயில்களும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு நேற்று புறப்பட்டன. கோவை-தாம்பரத்துக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து தலா ஒரு சிறப்பு ரயில் நாளை (ஜன.18) புறப்படவுள்ளது.

இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நேற்றைய தினம் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்சம் இருக்கையில் அமர்ந்து பயணிக்கவே ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் போதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆம்னி பேருந்து கட்டணத்தைப் பொருத்தவரை ஆங்காங்கே சோதனை செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினமும் சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,726 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம். அதேநேரம், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 2,632 சிறப்பு பேருந்துகளை இயக்கும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE