வட்டாரக் கல்வி அலுவலர் பணி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் வட்டாரக் கல்வி அலுவலர்பதவியில் 33 காலிப் பணியிடங்கள் உள்ளன.

இவற்றை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி வெளியிட்டது. இதற்கு இணைய வழியில் 42,716 பேர் விண்ணப்பித்தனர்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் 131 மையங்களில் செப்டம்பர் 10-ல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை35,403 பட்டதாரிகள் எழுதினர்.அவர்களுக்கான முடிவுகள் நவம்பர் 9-ம் தேதி வெளியானது.இவற்றில் மதிப்பெண், இடஒதுக்கீடு உட்பட விதிகளின்படி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 51 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 14-ம் தேதி நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் பணிக்கு தற்காலிகமாக தேர்வான 33 பட்டதாரிகளின் விவரப் பட்டியல், டிஆர்பி இணையதளத்தில் (www.trb.tn.gov.in) நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில் இறுதிகட்ட முடிவுகளை தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE